Sunday, June 30, 2013

கிளவ்டு கம்ப்யூட்டிங்: சில அடிப்படைத் தகவல்கள்

ணினியுடன், அதற்கு இணையான பல்வேறு சாதனங்களை இன்று பயன்படுத்துகின்றனர். செல்பேசி (ஸ்மார்ட்ஃபோன்), கைக்கணினி (டேப்ளட் பிசி) போன்றவற்றை குறிப்பாகச் சொல்லலாம். இவை அனைத்தும் எப்போதும் ஒருங்கிணைந்தே இருக்கின்றன. எனவே எப்போது வேண்டுமானாலும் ஒருவர் தம்முடைய தனிப்பட்ட தகவல்களை அணுகலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஒளிப்படம், திரைப்படம், ஆவணங்கள், மின்னஞ்சல், தொடர்புகள் என எந்த வகையான தகவலையும் உடனடியாக யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றை எல்லாம் விட்டு விட்டால் கூட இணையத்தில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அணுகிப் பெறலாம் அல்லவா? அதாவது கிளவ்டு கம்ப்யூட்டிங்கின் பயன்களை பரவலாக ஏற்கெனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
கிளவ்டு கம்ப்யூட்டிங் (Cloud computing) என்பது ஒரு தொழில்நுட்பம். தகவல்களையும், மென்பொருள்களையும் சேமிப்பதற்கு இணையத்தையும், மைய சர்வர் கணினிகளையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது. தனியாட்களும், நிறுவனங்களும், இந்த தகவல்களையும், மென்பொருள்களையும் பயன்படுத்தலாம். இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டிய விசயம், அப்ளிகேசன்களை கணினிகளில் நிறுவாமலே, ஒரு பொதுவெளியில் வைத்து பயன்படுத்தலாம் என்பதே!

இந்த தொழில்நுட்பமானது, சேமிப்பகம், நினைவகம், செயல்படுத்துதல், பேண்ட்விட்த் என அனைத்தையும் நடுநாயகமாக அமைப்பதன் மூலம் (centralizing storage, memory, processing and bandwidth), பயனாளர்கள் (தனியாட்களும், நிறுவனங்களும்) மிகக் குறைந்த திறனில் கணிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. கிளவ்டு கம்ப்யூட்டிங்கிற்கு எளிய எடுத்துக்காட்டாக, ஜிமெயில், யாகூ போன்ற மின்னஞ்சல் சேவைகளை சொல்லலாம். இவற்றைப் பயன்படுத்துவதற்கு மென்பொருளோ, சர்வரோ தேவையில்லை. பயனாளரிடம் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. மின்னஞ்சல்களை அனுப்பலாம், பெறலாம். சர்வரும், மின்னஞ்சல் நிர்வாக மென்பொருளும் கிளவ்டில் அதாவது இணையம் என்ற பொது வெளியில் இருக்கின்றன. கிளவ்டு சேவையை வழங்கும் யாகூ, ஜிமெயில் நிறுவனங்களால் இவை பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் பயனை மட்டும் பயனாளர் துய்க்கிறார். இதை விளக்க வல்லுநர்கள் ஒரு எளிய உவமையை காட்டுகின்றனர்: பால் தேவை என்றால் மாடு வாங்க வேண்டுமா? பயனாளர்களுக்குத் தேவை மென்பொருள் அல்லது வன்பொருளின் மூலம் கிடைக்கும் பயன். எனவே அந்த பயனை (பால்) மட்டு்ம் பெறலாம். ஏன் மென்பொருள்\வன்பொருளை (மாடு) வாங்க வேண்டும்.

ஒரு நிறுவனச் சூழலை எடுத்துக் கொள்வோம். ஊழியர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்குத் தேவையான வன்பொருள்\மென்பொருள்களை வழங்க வேண்டும். அதாவது அனைவருக்கும் கணினி வாங்கினால் போதாது. மென்பொருள் அல்லது மென்பொருள் உரிமங்களை வாங்க வேண்டும். புதிதாக ஊழியர்களை சேர்க்கும்போது அவர்களுக்கும் கூடுதலாக மென்பொருள்களை வாங்க வேண்டும்.

ஒவ்வொரு கணினியிலும் மென்பொருள் தொகுப்பை நிறுவுவதற்குப் பதிலாக இணையத்தின் வழி வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை வழங்கும் நிறுவனம் தனது சர்வர் கணினியில் மென்பொருள்கள் அனைத்தையும் வைத்திருக்கும். பல நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கும். இதுதான் கிளவ்டு கம்ப்யூட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இது கணினித்துறையி்ல் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

கணினிகளைப் பொறுத்தவரை, அப்ளிகேஷன்களை இயக்குதல் என்ற வகையில் கணிசமான பணிப்பளு குறைந்துள்ளது. கிளவ்டு எனப்படும் மின்வெளியை உருவாக்கும் நெட்ஒர்க் அந்த வேலையை பார்த்துக் கொள்ளும். பயனாளர்கள் நிலையில் மென்பொருள்களுக்கு மட்டுமின்றி, வன்பொருள்களுக்கான தேவையும் குறைகிறது. பயனாளர் கணினியில் பிரவுசர் அளவுக்கு எளிமையான ஒரு இடைமுகப்பு மென்பொருளை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

cloud 2

கட்டமைப்பு (Cloud Computing Architecture)

கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை முன் புலம் (front end), பின் புலம் (back end) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை இரண்டும் ஒரு நெட்ஒர்க் வழியாக (பெரும்பாலும் இணையத்தின் வழியாக) இணைக்கப்படுகின்றன. முன் புலம் என்பது கணினி பயனாளர். பின் புலம் என்பதுதான் கிளவ்டு பகுதி. முன்புலம் என்பது பயனாளரின் கணினி (அல்லது நெட்ஒர்க்), கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை அணுகுவதற்கான அப்ளிகேஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது. அனைத்து கிளவ்டு கம்ப்யூட்டிங் முறைகளும் ஒரே மாதிரியான பயனர் இடைமுகப்பை பயன்படுத்துவதில்லை. மின்னஞ்சல் சேவையை எடுத்துக் கொண்டால் அதற்கு பிரவுசரே (பயனர் இடைமுகப்பு) போதுமானது. இதுபோல் கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையும் அதற்கென ஒரு இடைமுகப்பை பயன்படுத்துகிறது. பின்புலத்தில் பலவேறு கணினிகள், சர்வர்கள் (servers), தகவல் சேமிப்பு முறைகள் (data storage systems) ஆகியவை சேர்ந்து கணிப்பீட்டுச் சேவைகளின் தொகுதியை  (cloud of computing services) உருவாக்குகின்றன. கிளவ்டு கம்ப்யூட்டிங் முறை என்பது டேட்டா பிராசசிங்கில் இருந்து வீடியோ கேம்ஸ் வரை எந்தவொரு கணினி புரோகிராமையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒவ்வொரு வகையான அப்ளிகேசனுக்கும் அதற்கென ஒதுக்கப்பட்ட தனி சர்வர் தேவை.

ஒரு மைய சர்வர் ஒட்டுமொத்த முறையையும் நிர்வகித்து, தகவல் போக்குவரத்தை கண்காணித்து செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும். இது விதிமுறைகளின் தொகுப்பான நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், மிடில்வேர் எனப்படும் சிறப்பு வகை மென்பொருளை பயன்படுத்தும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கிளவ்டு கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனம் சேமிப்பகங்களையும் பராமரிக்கும்.

cloud

பயன்பாடுகள்

கிளவ்டு கம்ப்யூட்டிங்கின் பயன்களுக்கு வரம்பு ஏதும் இல்லை. உரிய மிடில்வேர் இருந்தால் அனைத்து வகையான மென்பொருள் பணிகளையும் நிறைவேற்றும்.

புரோகிராம்களை இயக்கவும், டேட்டாக்களை சேமிக்கவும் மற்றொருவரின் கம்ப்யூட்டர் முறைய ஏன் நாட வேண்டும்?

அப்ளிகேசன்களையும், டேட்டாவையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணுக விரும்பலாம். இணையத்துடன் இணைப்பு பெற்ற எந்த கணினியையும் பயன்படுத்தி கிளவ்டு கம்ப்யூட்டிங் அமைப்பை அணுகலாம்.

இம்முறை ஹார்டுவேர் செலவை குறைக்கிறது. கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை பயன்படுத்தும்போது, பயனாளர்கள் நிலையில் மிகவும் மேம்பட்ட ஹார்டுவேர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. விலை குறைந்த கம்ப்யூட்டர் டெர்மினல்களை வாங்கினால் போதுமானது. (கம்ப்யூட்டர் டெர்மினல் எனும்போது, மானிட்டர், கீபோர்டு, மவுஸ் போன்ற உள்ளீட்டுச் சாதனங்கள், கிளவ்டு முறையுடன் இணைபபு பெறுவதற்கும், மிடில்வேரை இயக்குவதற்குமான பிராசசிங் திறன் இருந்தால் போதும். பெரிய ஹார்டுடிரைவும் தேவையில்லை).
கணினிமயமாக்கப்பட்ட நிறுவனங்களைப் பொருத்தவரை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உரிய மென்பொருள்களை வாங்கியே தீர வேண்டும். இந்நிறுவனங்கள் கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை பயன்படுத்தும்போது, அப்ளிகேசன்களை அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு கணினிக்கும் மென்பொருள்களையோ மென்பொருள் உரிமங்களையோ வாங்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக கிளவ்டு கம்பயூட்டிங் நிறுவனத்திற்கு பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வழங்கினால் போதும். சர்வர்கள் மற்றும் சேமிப்பகங்களை வைத்துப் பராமரிக்க இடம் தேவை. கிளவ்டு கம்ப்யூட்டிங் இந்த இடத் தேவையை நீக்குகிறது.

நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப செலவை குறைக்கவும் கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது. கம்ப்யூட்டர்களால் எழும் பிரச்சினைகள் குறைகின்றன.

Saturday, June 29, 2013

‘ஓப்பன் சோர்ஸ்’ ஹார்டுவேர்

 

    ஓப்பன் சோர்ஸ் என்றாலே பலருக்கும் சாஃப்ட்வேர் அதுவும் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஓப்பன் சோர்ஸ் என்பது, சாஃப்ட்வேர்களையோ இலவசத்தையோ குறிப்பது அல்ல. வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்பதே இதற்கு அடிப்படை. இதனால்தான் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் என்பதை தமிழில் திறவூற்று மென்பொருள் என அழைக்கிறோம். மென்பொருள் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது (அதாவது மூல நிரல்கள்) வெளிப்படையாக இருக்கும் என்பதோடு, அதை படியெடுக்கவும், மாற்றியமைக்கவும், லாப நோக்கின்றி விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. மைக்ரோசாஃப்ட்டின் தயாரிப்புகள் போன்ற உரிமை நிலை மென்பொருட்களைப் பொருத்தவரை இது சாத்தியமில்லை. ஆக ஒப்பன் சோர்ஸ் என்பது, கட்டமைப்பு\வடிவமைப்பு என்பதன் மீது பயனாளருக்கு வழங்கப்படும் சுதந்திரத்தைக் குறிக்கிறது. இந்த ஓப்பன் சோர்ஸ் என்ற கோட்பாடு ஹார்டுவேர் உலகில்தான் தொடங்கியது என்றால் பலரும் வியப்படையக் கூடும்.

    பிசி எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வடிவமைப்பில் ஒரு புரட்சியைத் தொடங்கி வைத்தது ஆல்டெர் 8800 மைக்ரோகம்ப்யூட்டர் கிட். 1975-ம் ஆண்டில் எம்ஐடிஎஸ் நிறுவனம் இதை விற்பனை செய்தது. இந்த கிட் முழுமையான கணினி அல்ல. மாறாக அதை வாங்கி, கட்டமைத்து கணினியாக உருவாக்க வேண்டும். அப்படி கணினியாக உருவாக்கும்போது, அதில் வடிவமைப்புச் சுதந்திரம் இருந்தது. இதற்காகவே, எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களும், ஹார்டுவேர் ஆர்வலர்களும் ஆல்டெர் கிட்டை வாங்கி, கணினியாக உருவாக்கிப் பயன்படுத்தினர். அது பற்றிய அறிவையும், வடிவமைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பெர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி இப்படித்தான் தொடங்கியது. இதில் மற்றொரு முக்கியமான செய்தி என்னவென்றால், ஹார்டுவேர் வடிவைமப்பில் திறந்த நிலை. இந்தத் தொடக்கப் புள்ளி, பின்வந்த ஆண்டுகளில் ஹார்டுவேர் உலகில் ஓரங்கட்டப்பட்டு விட்டது. ஆனால், சாஃப்ட்வேர் துறை இந்தப் போக்கை கையில் எடுத்துக் கொண்டு, பெரும் மாற்றங்களைச் சாதித்துள்ளது. லினக்ஸ் போன்றவற்றின் மாபெரும் வெற்றி, ஓப்பன் சோர்ஸ் என்பதை சாஃப்ட்வேர் உலகின் எதிர்காலமாக மாற்றியுள்ளது.

    இந்த வெற்றியின் காரணமாக, "ஒப்பன் சோர்ஸ் ஹார்டுவேர்" என்பதன் மீதும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. ஹார்டுவேர் (மெக்கானிக்கல்) டிராயிங், மின்சுற்று வரைபடங்கள், பிரின்டட் சர்கியூட் போர்டு (பிசிபி), ஃபர்ம்வேர் எனப்படும், சிப்பில் இயங்கும் மூல நிரல்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையும், பயனாளருக்கு சுதந்திரத்தை வழங்குவதுமே, திறவூற்று வன்பொருள் முறைக்கு அடிப்படை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஹார்டுவேர் வடிவமைப்பில் திறந்த நிலையைக் குறிக்கிறது.  எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமின்றி, சன், நியூரோஸ், பக் லேப்ஸ், போன்ற வணிக நிறுவனங்களும் ஓப்பன் சோர்ஸ் ஹார்டுவேரில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. சில ஓப்பன் சோர்ஸ் பிராஜெக்ட்டுகள் பற்றிப் பார்க்கலாம்:

நியூரோஸ்(Neuros):சிகாகோ நகரைச் சேர்ந்த நியூரோஸ் நிறுவனம், நியூரோஸ் ஓஎஸ்டி, நியூரோஸ் லிங்க் என இரண்டு தயாரிப்புகளை ஓப்பன் சோர்ஸ் முறைக்கு மாற்றியுள்ளது. (ஓஎஸ்டி என்பது டிஜிட்டல் ரெக்கார்டர். நியூரோஸ் லிங்க் என்பது தொலைக்காட்சியையும், இணையத்தையும் இணைக்கும் கருவி).


ஓப்பன்ஸ்பார்க்(OpenSPARC): சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம், தன்னுடைய அல்ட்ராஸ்பார்க் டி1 மைக்ரோபிராசஸரை (ஹிறீtக்ஷீணீஷிறிகிஸிசி ஜி1 விவீநீக்ஷீஷீஜீக்ஷீஷீநீமீssஷீக்ஷீ), ஓப்பன் சோர்ஸ் முறையின் கீழ் கொண்டுவந்தது. இத்திட்டத்திற்கு ஓப்பன்ஸ்பார்க் டி1 என்று பெயர். இதன் தொடர்ச்சியாக ஓப்பன்ஸ்பார்க் டி2 என்ற 64-பிட் மைக்ரோபிராசஸரை ஓப்பன் சோர்ஸ் செய்துள்ளது. ÔÔஅதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், பிராசஸர் கட்டமைப்பு வளர்ச்சியிலும், அதற்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதேÕÕ ஓப்பன்ஸ்பார்க் திட்டத்தின் நோக்கம் என சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓப்பன்மோக்கோ(OpenMOKO): பொதுப் பயனாளர்களுக்கு சந்தையில் அறிமுகமான முதல் மொபைல்போன் நியோ 1973. இதன் உருவாக்கத்தில், ஓப்பன்மோக்கோ நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. இதன் அடுத்த பதிப்பு, நியோ ஃபிரீ ரன்னர். இது தொடு திரை, வை-ஃபை, ஜிபிஆர்எஸ், புளூடூத் ஆகிய வசதிகளுடன் கூடிய, ஓப்பன்மோக்கோ லினக்ஸில் இயங்கும், டிரை-பேண்ட் ஜிஎஸ்எம் ஃபோன். ஃபிரீ ரன்னரைப் பொறுத்தவரையில் முக்கியமான அம்சம், பயனாளர் தனக்கு வேண்டிய மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம் என்பதே.

இணையம் இயங்காமல் நின்று போகாது!?!

 

 

பேருந்தை ஓட்டுவதற்கு அதன் பொறியமைப்பு, இயக்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சில அடிப்படைக் கூறுகளைத் தெரிந்திருப்பது பல நேரங்களில் கைகொடுக்கும். இதேபோலத்தான் இணையமும். அதைப் பயன்படுத்த, எப்படி இயங்குகிறது என்ற விசயம் அவசியமில்லை என்றாலும், அடிப்படையான சில செயல்பாடுகளைத் தெரிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் இணையம் எப்படி அமைந்துள்ளது, வெப் பிரவுசிங் (இணைய உலா) எப்படி நடைபெறுகிறது, மின்னஞ்சலை ஒருவருக்கு அனுப்பும்போது என்ன நடைபெறுகிறது என்பன உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

உலக அளவிற்கு பரவிய வலைப் பின்னல்

சுருக்கமாகச் சொன்னால், இணையம் என்பது ஒரு உலகளாவிய வலைப் பின்னல். இதில் உங்கள் கணினி, அண்டை வீட்டுக்காரரின் கணினி, கூகுள் நிறுவன கணினிகள் என அனைத்தும் அடக்கம். இணையத்தி்ன் வரலாறு 1960கள் என்ற காலகட்டத்திற்கு பின்னோக்கி செல்கிறது. இருப்பினும், தற்போது நாம் பயன்படுத்தும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய வலைப் பக்கங்களாக (web pages) அமைக்கும் முறை 20 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகும்.

ஹார்டுவேர் இணைப்புகள்

இணையத்தில் இணைந்துள்ள கோடிக் கணக்கான கணினிகள், முதன்மையாக கம்பிவடங்கள் (கேபிள்) மூலமே இணைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இணைக்கும் தொலைபேசி வயர்களில் தொடங்கி, மின்னல் வேகத்தில் தகவல்களை கடத்தும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள் வரை அனைத்து வகையான கம்பிவடங்களும் இதில் அடக்கம். இன்றைக்கு பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்துகிறோமே, அது ஏடிஎஸ்எல் (Asymmetric Digital Subscriber Line - ADSL) எனப்படுகிறது. அதாவது கணினியானது பிராட்பேண்ட் ரூட்டருடன் (broadband router) இணைக்கப்படுகிறது. பிராட்பேண்ட் இணைய இணைப்பு கொடுக்கும்போது, சிறிய கருப்பு நிற பெட்டி வைக்கப்படுகிறதே அதில் ADSL+ router என குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்திருக்கலாம். இந்த பிராட்பேண்ட் ரூட்டரானது தொலைபேசியுடன், ஒரு சிறிய சாக்கெட் வழியாக இணைக்கப்படுகிறது.

அதிலிருந்து உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்திற்கு இணைக்கப்பட்டு, அங்கிருந்து இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் (internet service provider - ISP) சர்வர்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த சர்வர்கள் மூலமே இணையத்தின் எஞ்சிய பகுதிகளுடன் இணைப்பு கிடைக்கிறது. ஃபைபர்-ஆப்டிக் கேபி்ள்கள் கடல் கடந்து கண்டங்களை இணைக்கின்றன. இவை நொடிக்கு பல டிரில்லியன் கணக்கான தகவல்களை கடத்தும் திறன் கொண்டவை. இணைய தொடர்பு என்று வரும்போது செயற்கைக் கோள் இணைப்புகளும் முதன்மையான பங்கு வகிக்கின்றன.

பயனாளர்களைப் பொருத்தவரை வீட்டுக் கணினி அல்லது அலுவலகக் கணினிக்கு, இணைய தளங்களை வழங்குபவை சர்வர் கணினிகள் ஆகும். சர்வர்களை ஆற்றல்மிக்க கணினிகள் என்று கூறலாம். ஒரு இணைய தளத்திற்கு செல்லும்போது (சான்றாக www.google.com) என்ன நடக்கிறது என்றால், சர்வரானது தகவல்களை இணையத்தின் வழியாக பயனாளர் கணினிக்கு அனுப்பி வைக்கிறது.

சரி, கோடிக் கணக்கான இணைய பக்கங்கள் இருந்தாலும், பிரவுசரில் www.google.com என்று தட்டச்சு செய்யும்போது சரியாக அந்த இணைய தளம் எப்படி காட்டப்படுகிறது? இதற்கு விடைதான் ஐபி முகவரி (internet protocol address - IP address). இணையத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி முகவரி உண்டு. இது தொலைபேசி எண்ணைப் போன்ற ஓர் எண்ணாகும். அதேநேரம் ஒவ்வொரு கணினிக்கும் எண்கள் வேறு என்பதால் கண்டுபிடிப்பது எளிது. சான்றாக  62.140.213.251 என்பது ஓர் ஐபி முகவரி. இதுபோன்ற எண்களை மனதில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால், இணைய தளங்கள் டிஎன்எஸ் எனப்படும் டொமைன் பெயர் முறையை (Domain Name System - DNS)  முறையை பயன்படுத்துகின்றன. அதாவது எண்கள் www.bbc.com என்பது போன்ற பெயர்களாக மாற்றப்படும் முறை இது. இருப்பினும் பெயர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஐபி முகவரி தெரிந்தால் அதையும் தட்டச்சு செய்து, இணைய தளங்களை அணுகலாம். உங்கள் கணினியின் ஐபி முகவரியைத் தெரி்ந்து கொள்ள வேண்டுமானால்,  www.whatismyipaddress.com எனற தளத்திற்கு செல்லலாம். இதேபோல இணைய தளத்தை நடத்துபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள http://whois.domaintools.com என்ற தளத்திற்கு செல்லலாம்.

மின்னஞ்சல்களை அனுப்புதல்

இணையத்தில் அதிகம் புகழடைந்துள்ள பயன்பாடுகளில் ஒன்று மின்னஞ்சல். ஒவ்வொரு நொடியும் லட்சக் கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவை எப்படி உரிய இடத்திற்கு போய்ச் சேருகின்றன. வழக்கமாக அஞ்சல் அனுப்பும்போது முகவரியுடன் அனுப்புவது போல மின்னஞ்சல்களும் முகவரியுடனே செல்கின்றன. அதாவது தமிழ் கம்ப்யூட்டருக்கு மின்னஞ்சல் அனுப்ப tamilcomputer@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதில் @ என்ற குறியீட்டிற்கு முன்னர் உள்ள பகுதி பெறுநரை குறிக்கிறது. அந்த குறியீட்டிற்கு பின்னால் உள்ள பகுதி, மின்னஞ்சல் முகவரியை பராமரிக்கும் இணையதளம். மின்னஞ்சல் அனுப்பும்போது, அது முதலில் இணைய சேவை வழங்கும் நிறுவனத்தின் சர்வருக்கு (ISP’s email server) செல்லும். அதன் பின்னரே உரிய முகவரிக்கு செல்லும். இந்த பரிமாற்றத்திற்கு டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரி (Domain Name Registry) எனப்படும் டொமைன் பெயர் பதிவேடு உதவுகிறது.

பாக்கெட்டுகள் பற்றி தெரி்ந்து கொண்டால்தான் இணையத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இணையத்தின் வழி எல்லா தகவல்களும் 0, 1 என்ற வடிவிலேயே பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒரு தகவலை அனுப்பும்போது அது பல துண்டுகளாக பிரித்து அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு துண்டும் பாக்கெட் எனப்படுகிறது. இந்த பாக்கெட்டுகள் வெவ்வேறு திசையி்ல் வெவ்வேறு கணினிகள் வழியாகக் கடத்தப்படும். ஏதாவது ஒரு (சர்வர்) கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே இணையம் பேருந்துகளைப் போல பழுதாகி இயங்காமல் நின்றுவிடுதல் என்பதற்கு வாய்ப்பே இல்லை.